பக்கங்கள்

செவ்வாய், 30 ஜூலை, 2013

மச்சகாரன் - கதை .......





பாலத்தின் நடுபகுதிக்கு வந்ததும் வண்டியை நிறுத்த சொல்லி சரணின் தோள் மீது கை வைத்து அழுத்திய படி இறங்கி கைப்பிடி சுவற்றிற்கு அருகில் ஓடினான் கார்த்தி. அங்கிருந்து பார்க்கும் பொழுது நீலத்திரை கடல் ஓரத்தில் அமைந்திருக்கும் நாகை மீன்பிடி துறைமுகமும், அங்கு அழகுற வரிசை படுத்தி நிற்க வைக்க பட்டிருக்கும் விசைப்படகுகளும் கண்ணுக்கு விருந்து வைத்தன. வங்ககடலில் புயல் மையம் கொண்டிருக்கும் நாட்களில் அதிகம் தொலைகாட்சிகளில் காட்டப்படும் அல்லது அதிகம் பேசப்படும் நாகை அக்கரைபேட்டையில் அமைந்துள்ள மேம்பாலத்தில் நின்று கொண்டு தான் கடலின் கவின்மிகு காட்சியை பார்த்து கொண்டிருக்கிறான் கார்த்தி.
 நம் வாழ்க்கையில் எத்தனை முறை பார்த்ததாலும் அலுக்காத சில விஷயங்களில் கடலுக்கு என்றுமே முதலிடம் உண்டு. அதுவும் மேற்சொன்ன பாலத்தின் மீது நின்றுகொண்டு பார்க்கும் பொழுது மனதை பறிகொடுக்காதவர் இருந்தால் அவர்களுக்கு அடிபடையில் எதோ ஒரு கோளாறு இருப்பது உறுதி.
 “இந்த இடத்துல நின்னு இதோட லட்சித்தி ஒருதடவையாவது இதேமாதிரி பாத்திருப்ப அப்டி என்னதான் இருக்கோ” என்று தன் ஆசை காதலனை செல்லமாக கடிந்து கொண்டபடி வண்டியை நிறுத்தி விட்டு அருகில் வந்தான் சரண்.
“சும்மாவா சொன்னாங்க முத்தத்துல காவேரி முழுவ மாட்டா மூதேவின்னு” எதுமே நமக்கு ரொம்ப கிட்ட இருந்தா அதோட மதிப்பே தெரியாதுடா........... எப்பவாவது பாக்குரவங்களுக்குதான் அதோட மதிப்பு தெரியும் என்று சரணை பார்த்து கூறி விட்டு மீண்டும் ரசிக்க தொடங்கிவிட்டான் கார்த்தி.
கரையில் நின்று ரசிப்பவர்களுக்கு பலவித ஆச்சர்யங்களை கொடுக்கும் கடல், நித்தம் நித்தம் பலவித இன்னல்களுக்கு இடையில் சான் வயிற்றிற்காக ஊன் உறக்கம் இன்றி உழைக்கும் மீனவர்களுக்கு அதே ஆச்சர்யங்களை தருவதில்லை. எனவே அத்தகைய மீனவர்களில் ஒருவனான சரணுக்கு மேற்குறிப்பிட்ட காட்சி ஆச்சர்ய படுத்தாததில் எந்த வித வியப்பும் இல்லை.
சரி….. காதல் பறவைகள் இரண்டும் கடலின் அழகை ரசித்து முடிப்பதற்குள் இவர்களை பற்றிய சிறு விளக்கத்தை கொடுத்து விடுகிறேன்.
நாகபட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் முக்கிய பணியில் இருக்கும் கார்த்தியின் தந்தை கரூரில் இருந்து  ஒழுங்கு நடவடிக்கை காரணமாக மாற்றலாகி இங்கு வந்து ஆறுமாதங்களாகி விட்டது. பொறியியல் பட்ட தாரியான கார்த்திக்கு அவன் வேலை பார்த்த உர தொழிற்சாலை சூழல் ஒத்து கொள்ளாததால் அந்த வேலைக்கு முழுக்கு போட்ட தருணத்தில் தான் மேற்சொன்ன மாற்றல் அரங்கேறியதால் கார்த்தியும்  தாய் தந்தையரோடு நாகை வந்து தங்கும் சூழல் உருவாயிற்று. அமைதியான,அழகான கரூரிலிருந்து புதிதாக குடிவந்திருக்கும் நாகை கொஞ்சம் கூட மனதை கவரும் வகையில் இல்லை என்றும் வெளியில் செல்ல துணையாக நண்பர்கள் இல்லாததாலும் வந்த புதிதில் எங்குமே செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கொண்டு முகநூல் மூலம் நண்பர்களுடன் உரையாடி கொண்டும் வேலை தேடி கொண்டும் இருப்பான் கார்த்தி. எங்காவது வெளிமாநிலத்தில் சென்று தங்கி அங்கேய பணியாற்ற வேண்டும் என்பதுதான் கார்த்தியின் கனவு  அதற்காக இணையத்தின் மூலமாக அனைத்து பகீரத பிரயத்தனங்களையும் மேற்கொண்டும் இருந்தான்.
பெரும்பாலும் அசைவத்தை விரும்பாத கார்த்தியின் வீட்டிற்கு வேளாங்கண்ணிக்கு நேர்த்திகடன் நிறைவேற்ற சென்ற கார்த்தியின் அத்தை குடும்பம் ஒருநாள் தங்கும்  முடிவுடன் திடீரென்று வந்ததது. அன்று மனுநீதி நாள் என்பதால்
“அம்மா என்ன கேக்குறாலோ கிட்டருந்து வாங்கி குடு தம்பி.......”  என் தங்கச்சி நல்லா சாப்ட்டு போகட்டும்
 என்று கூறி விட்டு எப்போதும் செல்லும் நேரத்தை விட முன்கூட்டியே சென்றுவிட்டார் கார்த்தியின் தந்தை. அத்தை மகள் ஸ்ரீவதிக்குதான் கார்த்தியை மனம் முடிக்க வேண்டும் என்று அரசல் புரசலாக பேசி கொள்ளுவதாலும் அதையே சாக்காக வைத்து அவள் அடிக்கடி இவனிடம் வழிவதும் கார்த்திக்கு பிடிக்காத ஒன்று. அதனாலேயே பெரும்பாலும் இவர்களின் வருகையை விரும்பாதவன், தாயின் நச்சரிப்பின் காரணமாக நாம் தொடக்கத்தில் பார்த்த மீன் பிடி துறைமுகத்துக்கு மீன் வாங்க சென்ற பொழுதுதான் முதன் முதலாக சரணை பார்த்தான்.
ஏன் மீன் வாங்க நேராக அங்குதான் செல்ல வேண்டுமா,,,? கடைதெருவில் வாங்க முடியாதா,,,,,,? என்று நீங்கள் கேக்கலாம். கார்த்தியின் தாய்க்கு கிடைத்த புது நட்பான பக்கத்து வீட்டு பத்மாதான்
“நாம நேரா அக்கரபேட்டக்கி போன கொஞ்ச விலையிலேயே நெறைய மீன் வாங்கலாம். எங்கூட்டு காரர்லாம் அங்கதான் போய் வாங்குவார்’” என்று ஆலோசனை வழங்கியவள். ஆனால் அவள் கூறியது போல அங்கு மீன் வாங்குவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை கார்த்திக்கு.
நேரம் காலை எட்டுமணி என்பதால் அதிகாலையிலேயே நாட்டு படகுகளில் சென்ற மீனவர்கள் அபோழுதுதான் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாட்டு படகிலும் படகுக்கு சொந்தகார மீனவர் ஒருவரும் கூலிக்கு பணியாற்றும் ஐந்தாறு மீனவர்களும் கடலுக்குள் செல்லுவது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக இன்று அதிக பாடு விழுந்திருப்பதால் மகிழ்ச்சியுடன் கூடிய ஆரவரங்களுக்கு இடையே ஒரே சத்தமாகவும் ஏராளமான கூடை சுமந்த பெண்களுடனும், வியாபாரிகளுடனும் காட்சி அளித்தது அந்த இடம்.  
கடற்கரையோரம் வலையில் சிக்கியிருக்கும் மீன்களை மீனவர்கள் தரம்பிரித்து கொண்டிருந்தனர். தரம் பிரித்த மீன்களை தங்கள் வீட்டு பெண்மணிகள் இருக்கும் இடத்தில் வந்து கொட்ட, தொடர்ந்து அந்த பெண்கள் துள்ளுகெண்ட ஏறனறூ... எரநூறு....., பார நானுறு..... நானுறு...... கோலா கூட நூறு..... நூறு......... என்று வகை வகையாக ஏலம் போட.... வாங்க வந்த பெண்கள் கூடைகளுடன் ஏலம் எடுத்து கொண்டு இருந்தனர். அந்த பரபரப்பான சூழலில் யாரிடம் மீன் வாங்குவது?, யாரை பார்ப்பது? என்று குழம்பி தவித்த கார்த்திக்கு பிறகுதான்  மீன் வாங்க வந்திருக்கும் பெண்களுக்கு தெரிந்தவர்கள் மட்டும் அங்கு மலிவு விலையில் மீன் வாங்கி கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் அப்படி யாரையும் இவனுக்கு தெரியாதால் தவித்து போய் நின்ற பொழுதுதான் அருகில் நிற்கும் ஒரு பெண்கள் கூட்டத்தில் மீன்களை கூடையில் சுமது  வந்து கொட்டினான் சரண்.
காசை கொடுத்து காய்ந்து காய்ந்து கட்டுடல் மேனிக்காக உடற்பயிற்சி நிலையத்தில் தவம் கிடக்கும் இன்றைய இளைஞர்களை போலல்லாமல் உழைத்து உழைத்து உரமேறி கிடந்தது சரணின் உடல். அவன் அகன்ற தோளும் விரிந்த மார்பும், முறுக்கேறி புடைத்து நிற்கும் நரம்புகளை தாங்கிய கரங்களும், கறுத்த நிறமும், கடைந்தெடுத்த முகமும், கார்த்தியை கவரவே வந்த வேலையை மறந்து சரனை சைட் அடிக்க தொடங்கி விட்டான் கார்த்தி.
மேலுமிரண்டு முறை சென்று வந்து மீன்களை கொட்டியபின் கீழே அமர்ந்து நல்ல மீன்களை தரம் பிரித்த கொண்டிருந்த சரணுக்கு சிறிது நேரம் கழித்ததுதான் தெரிந்தது அவனை ஒருவன் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருப்பது. “பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல முதல் பார்வையிலேயே கார்த்தியை புரிந்து கொண்ட சரன், தொடர்ந்த பார்வை படலங்களுக்கு முற்று புள்ளி வைத்து, அவன் பையுடன் வந்திருப்பது மீன் வாங்கதான் என்பதை அறிந்தவனாய் மெல்ல சென்று பேச்சு கொடுத்தான். பின் அவனுக்காக மலிவு விலையில் மீன் கொடுத்தான், பின் கைபேசி எண் கொடுத்தான் அவன் சென்ற பின் அவனிடம் அவன் மனதையும் கொடுத்தான். காற்று வாங்க போனவன் கவிதை  வாங்கியதை போல மீன் வாங்க போன கார்த்தி ஆங்கொரு ஆண் வாங்கி வந்து விட்டான்.
. தொடர்ந்த பல பேச்சுகளும், மறைமுக உறவுகளும், அவர்களுக்கு இடையே காதலை வளர்க்க, நண்பர்கள் என்ற போர்வையில் அவர்கள் காதலிக்க ஆரம்பித்து இன்றோடு ஐந்து மாதம் ஓடிவிட்டது. இந்த ஐந்து மாத காலத்தில் சரணுக்கு கார்த்தியை பிடித்ததை விட சரணின் தங்கை ஈஸ்வரிக்குதான் கார்த்தியை மிகவும் பிடித்து விட்டது. எப்போது பார்த்தாலும் கார்த்திண்ணா.........!!. கார்த்திண்ணா..........!! என்று அவள் உரிமையுடன் அழைப்பது இவனுக்கும் பிடிக்கும்.
வாழ்வளிக்கும் கடல் மாதாவே சாவளிக்கும் சவக்குழியாய் மாறி  சுனாமி என்ற பெயர் தாங்கி கடலோர மக்களை காவு வாங்கிய பொழுது சரணும் ஈஸ்வரியும்தான் அவர்கள் குடும்பத்தில் தப்பித்தனர். உலகில் தாய்ப்பாசத்திற்கு இணையான பாசம் தங்கை பாசம். சரணின் மீது உயிரையே வைத்திருக்கும் ஈஸ்வரி தனக்கு இணையாக தன் அண்ணன் மீது கார்த்தியும் பாசம் காட்டுவதால் தான் கார்த்தியையும் ஓரு அண்ணனாக ஏற்று கொண்டிருந்தாள். கடந்த ஒரு மாதமாக அமலில் இருக்கும் தடைக்கால மறியலால் சரண் அதிகம் பாடுக்கு செல்லமல்  கார்த்தியுடன் சுற்றி வருகிறான்.
 தற்பொழுது மீன்கள் இனபெருக்க காலம் என்பதால் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிப்பதற்கு நாற்பத்தி ஐந்து நாட்கள் அரசு தடை விதித்துள்ளது. இந்நாட்களில் விசைப்படகுகளை பழுது பார்க்கவும், புது வர்ணம் தீட்டவும் பயன்படுத்தி கொள்வர் அதனதன் உரிமையாளர்கள். புதிதாக விசைப்படகு கட்டி கொண்டிருப்பவர்கள் தடைகாலம் முடியும் போது கடலில் படகை இறக்கிவிடும் முடிவோடு முனைப்பாக செயல்படுவர். விசைப்படகில் ஊதியதிற்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலை கட்டுவது, வலைக்கு செல்வதுமாக (நாட்டு படகில் மீன்பிடிக்க செல்வது) இருப்பர், வெல்டிங் தெரிந்தவர்கள் படகு கட்டும் சாலைகளுக்கு சென்று வேலை பார்ப்பதும் உண்டு. வியப்படைய வேண்டாம்!!, இன்றைய மீனவர்களில் முக்கால்வாசி இளைஞர்கள் டிப்ளமா அல்லது ஐடிஐ முடித்தவர்கள்தான்.  வருமானம் மிகையாக கிடைப்பதால் வேறுவேலைகளுக்கு செல்லாமல் கடலில் பாடுக்கு செல்கின்றனர். வேறு வேலைகளுக்கு செல்வோரும் உண்டு. ஏன்? நமது சரண் கூட மெக்கானிக்கல் டிப்ளமா முடித்தவன்தான்.
சரி பாலத்தின் மீது நிற்கும் காதலர்கள் எதோ பேசிகொள்வது போல் தெரிகிறது வாருங்கள் என்னவென்று பார்ப்போம்.!
“பாத்தது போதும் சீக்கிரம் கெளம்பு வயிறு வேற பசிக்குது, ஈசு உனக்கு புடிச்ச வட்லாப்பம் செஞ்சி வெச்சிருக்கணு போன் பன்னுணுது
என்று துரித படுத்திய சரணின்  கைபேசி அழைத்தது. எடுத்துபார்த்த பொழுது திரையில் ராஜ், காலிங் என்று ஒளிர்ந்ததால். அதுவரை சரணின் கைகளை தழுவி கொண்டிருந்த செல்போன் இப்போழுது அவனது காதை தழுவி கொண்டது.
  “ ஹலோ...... சொல்லு மச்சான்......”
“ எங்கடா இருக்க முக்கியமான விஷயம் பேசனும்டா”
“ம்ம்ம்..... இங்கதாண்டா பாலத்துகிட்ட இருக்கோம் நானும் கார்த்தியும் ஏன்டா என்ன விஷயம்”
“இல்ல மச்சான் ஒரு ஹெல்ப் பண்ணனும்டா........ உன்னால முடியுமா தெரியல.....!!!!”
“சொல்லாம எப்டிடா தெரியும் சொல்லு முடிஞ்சா செய்யிறன். அத்த எப்டிடா இருக்கு.?“
“ம்ம் நல்லாருக்குடா........ ரெண்டு வாரமா அதுக்கு ஆஸ்பத்திரி செலவு அது இதுன்னு ஒன்றலட்சம் கிட்ட தட்ட செல்வாயிட்டுடா..... இப்ப போட்டுக்கு ராடார், நோய்சர் (ஆமைக்கூட்டங்கள் வலையில் சிக்கி விடாமல் விரட்டும் சாதனம்) வக்கிறது, வயரிங் செலவுன்னு பாக்கி வேலக்கி சுத்தமா காசு இல்லடா..... மறியல் முடிஞ்சதும் போட்ட ஏறக்குறது கஷ்டம் போல இருக்குடா........ அதான் உனக்கு தெரிஞ்ச இடத்துல எங்கியாவுது ஒரு ரெண்டு லட்சம் பொரட்டி குடுக்கமுடியுமா......னு கேக்கலாம்னு........?!!!!”
 “நான் எங்கடா பொரட்டுறது? என்று சற்று யோசித்தவன் சரிடா.......... ஈசு கல்யாண செலவுக்குன்னு ஒரு அஞ்சு லட்சம் பேங்க் ல போட்டு வெச்சிருக்கன். அதுல வேணா எடுத்து தரன்டா..... உன்னால முடியிரப்ப குடு போதும்.” என்று இன்னும் சிறிது நேரத்தில் வந்து பார்ப்பதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்தான்.
தன்காதலனின் பேச்சை வைத்தே ஒருவாறு கணித்த கார்த்தி
“யாரு தங்கம்!!........ராஜியா.......? என்று சரியாக கேட்டான்
“ஆமாண்டா........ போட்டு செலவுக்கு பணம் வேணுமாம் அதான்......... நாளைக்கு பேங்க்ல போய் எடுத்துகுடுக்கணும்”
“கல்யாணத்துக்குனு வெச்சிருக்குற பணத்த யோசிக்காம குடுக்குறியே.... ஒரு வேளை சமயத்துல அவன் தருலனா என்னடா.....பண்னுவ?
ஆமா இப்ப என்ன நாளா வெச்சிருக்கு அடுத்த வருஷம் தானடா....... கல்யாண பேச்சே தொடங்கணும். அபடியே அவன் தரலைனா நான் என்ன செத்த போ போறான் அதுக்குள்ள சம்பாரிச்சிட மாட்டனா.....? என்று கேட்டவனின் கன்னத்தில் பொளேரென ஒரு அறை விழுந்தது.
கையை உதறி கொண்டே
“உனக்கு எத்தன தடவ சொன்னாலும் புத்தியே வராதா..? என்ன டென்ஷன் ஆக்கி பாக்கலைனா உனக்கு தூக்கம் வராதா.......?”
 என்று கூறி விட்டு கோபத்துடன் நடையை கட்ட ஆரம்பித்து விட்டான் கார்த்தி. கார்த்தியை அடிக்கடி இப்படித்தான் உசுப்பேத்தி ரசிப்பான் சரண். இதனால்தான் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை மூண்டுவிடும். சரி இவனுங்க இப்ப சமாதானம் ஆக இன்னும் கொஞ்சம்நேரம் ஆகும். அதுக்குள்ள போனவாரம் இதே காரணத்தால் நடந்த ஒரு சிறு சண்டையை பற்றி கூறிவிடுகிறேன்.
சற்று முன்பு போனில் பேசினானே ராஜ் அவன் சரணின் நண்பன், தனது தந்தை காலத்தில் சொந்தமாக ஐந்தாறு விசைப்படகு வைத்திருந்த குடும்பம். ஆழிப்பேரலையின் போது அந்த படகுகள் எல்லாம் சிதைந்து விட்டது. அந்த கவலையிலேயே அவனது தந்தையும் போய் சேர்ந்து விட்டார். நன்றாக வாழ்ந்த குடும்பம் அன்றாட வாழ்விற்கே அல்லாடிய பொழுதுதான் சொந்தமாக விசைப்படகு கட்டுவது என்ற குறிக்கோளுடன் சிறுக சிறுக பணம் சேர்த்து லட்ச கணக்கில் செலவு செய்து படகு கட்டி வருகிறான் இன்னும் இரண்டு வாரத்தில் கட்டுமானம் முடிந்து கடலை முதல் முறை பார்க்க இருக்கிறது அந்த புதிய படகு. இந்நிலையில் சென்றவாரம் ஏற்கனவே நீரிழிவால்  பாதிக்க பட்டிருந்த ராஜின் தாயாருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் அறுவை சிகிச்சைக்காக அப்போலோ வில்  அனுமதிக்க பட்டிருந்தார். அவரை காணும் சாக்கில் சரனும் கார்த்தியும் சென்னைக்கு சென்று அறை எடுத்து தங்கி நன்றாக ஊர் சுற்றி பார்த்து  காதலாகி கசிந்துருகி உரையாடி கொண்டிருக்கும் பொழுது
    “கார்த்தி என்ன ஏன்டா நீ இவ்ளோ லவ் பண்ற.......? நான் திடீர்னு உன்ன விட்டுட்டு போய்ட்டா.........? என்னடா பண்ணுவ,..........?”
என்று கேட்டான் சரண்.
“இப்புடி மொட்டயா கேட்டா எப்புடி....? விட்டுட்டு எங்க போவ......? என்னய ஏமாத்திட்டு வேற எதாவது ஜிகிடிய கூட்டிகிட்டு ஓடிடுவியா......?”
“ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரி அப்டிதான் வச்சுகியேன்.....”
“ஓத வாங்க போறான் பாரு ஒருத்தன்....!!! அப்டியே நீ ஓடுனாலும் என்ன தவிர வேற ஒருத்தனும் உன்னைய ரெண்டு நாளுக்கு மேல வெச்சுக்க மாட்டான்”  நக்கலாக சொல்லிவிட்டு சிரித்தான் கார்த்தி.
“சரி அப்ப அதுவேணாம், நான் செத்து போயிட்டா என்ன பண்ணுவ......?”
இதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்தி அருகில் பழம் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து உள்ளங்கையில் சரேலென கிழித்தான்..... ரத்தம் அதிலிருந்து பீறிட்டு கிளம்பியது.ரத்தம் வழிய வழிய வலியால் துடித்த படி இப்புடி கிழிச்சுகிட்டு செத்துடுவண்டா....? நீ இல்லாத என் வாழ்க்கைய என்னால நெனச்சு கூட பாக்க முடியாதுடா.. என்று கண்ணீர் மல்க கூறி விட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டான்.
.அதன் பின் அவனை நாகை வருவதற்குள் சமாதன படுத்தவே சரணுக்கு நேரம் போத வில்லை. விளையாட்டாக கேக்க போய் வினையாக முடிந்ததை எண்ணி சரணுக்கு வருத்தம் என்றாலும் தன் மீது உயிரையே வைத்திருக்கும் கார்த்தியை எண்ணி பெருமையாக இருந்தது.
எவ்வளவு கோபமிருந்தாலும் சரண் தனது இரும்பு கரம் கொண்டு கார்த்தியின் இடுப்பை அணைத்தால் அதில் சொக்கி அனைத்தையும் மறந்து விடுவான் கார்த்தி. இதேபோன்ற நிகழ்வொன்றை நாம் பேசிகொண்டிருக்கும் இவ்வேளையில் நமக்கு தெரியாமல் சரண் நடத்திவிட்டதால் இருவரும் சமாதனம் ஆகி வண்டியில் ஏறி படகு கட்டும் தளத்திற்கு விரைந்தனர்.
 தடைக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கார்த்தியின் வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது... அதனை வாங்கி பார்த்த கார்த்தியின் தந்தைக்கு முகமெல்லாம் அளவில்லாத மகிழ்ச்சியில் ஆயிரம் வாட்ஸ் பல்புகள் எறிந்தன.......!!! ஆனால் தற்பொழுது கார்த்தியும் சரணும் படகு கட்டும் தளத்தில் ராஜ்குமார் அக்கரைபேட்டை என்று தேசியக்கொடி போன்று மூவர்ணத்தில் எழுதப்பட்ட ராஜின் புதியபடகின் அருகில் நின்று கொண்டு எதையோ படு தீவிரமாக விவாதித்து கொண்டு இருந்தனர் அதில் ராஜ் யின் முகம் மட்டும் சற்று கவலையுடன் இருந்தது.
“இதுக்கு போய் ஏண்டா வருத்த படுற...... ரெண்டுநாள்தான....!!! “ என்று கேட்டான் சரண்.
“அப்புறம் என்னடா பண்ண சொல்லுற.. இவ்ளோ நாளா கஷ்ட்ட பட்டு கடன உடன வாங்கி போட்ட கட்டுனா...... கடல்ல இறங்குற நாள்ல போய் எவ்ளோ பிரச்சன இருக்குறப்ப டீசல் விலையேறுனதுக்காக ஸ்ட்ரைக் பண்ண போறங்குரானுகளே இது நியாயமாடா......?” என்றான் ராஜ்.
“அப்புறம் என்னடா பண்ண சொல்லுற....? இதுமாதிரி எதாவது பண்ணத்தான் நம்ம கவர்மெண்ட்க்கு புரியும் இதுவும் நல்லதுதான்னு நெனச்சிக்க.” இது கார்த்தி.
“இல்ல கார்த்தி... இந்த ஸ்ட்ரைக்லாம் வேலைக்கு ஆவாதுடா......போட்டுக்கு போறவன் வேலைநிறுத்தம் பண்ணுனா....... வலைக்கு போறவன் (நாட்டு படகு மூலம் மீன் பிடிக்க செல்வது) புடிக்கிற மீன் கெடைகிறதால நம்மளோட ஸ்ட்ரைக் தடம் தெரியாம போய்டுது. இதுக்காக தீர்வு கெடைக்கிற வரைக்கும் வலைக்கு போவாம இருந்தா வயித்துக்கு என்ன பண்றது....? எல்லா போராட்டத்தையும் ஒருங்கினைக்கிறதுக்கு ஒரு ஆள் இல்லைனா எல்லாம் வீண் வேலைதான்....... எங்க பிரச்சனைக்காக போரடுறதுக்காக ஒரு தலைவர்னு யாருமே கெடயாது, அதுமாதிரி யாராவது இருந்து எல்லா மீனவர்களையும் இணைச்சு போரடுனாதான் டீசல் பிரச்சனயிலேருந்து, சிலோன்காரண்ட்ட அடிவாங்குறது வரைக்கும் தீர்வு கெடைக்கும்” மடைதிறந்த வெள்ளம்போல பேசிய தன் காதலனின் சமூக விழிப்புணர்வு வார்த்தைகள் கேட்டு பெருமித பட்டான் கார்த்தி.
“சரி மாமா..... நாளன்னைக்கு போட் மொத வலைக்கு போவும்போது நீயும் வேலைக்கு வரணும் நீ இருந்தா எனக்கு எல்லாமே நல்லதா நடக்கும்டா என்று சரணை பார்த்து ராஜ் கூறும் போது கார்த்தியின் செல்போன் ஒலித்தது.
“சொல்லுங்கப்பா.......”
“கார்த்தி எங்கருந்தாலும் உடனே வீட்டுக்கு வாடா...ஒரு சந்தோசமான விஷயம் காத்திருக்கு.” என்று கூறி விட்டு தொடர்பை துண்டித்தார் அவர்
வீட்டிற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த கார்த்தியிடம் மேற்சொன்ன கடிதம் தரப்பட்டது. பிரித்து படித்தான்.
அவன் எப்பொழுதோ எழுதிய ரயில்வே தேர்வில் வென்று விட்டதாகவும் இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெற இருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் அகமதாபாத்தில் பணியேற்க வேண்டும் என்று கடிதம் வழங்கிய செய்தி கார்த்தியின் தலையில் இடியாக இறங்கியது.
தாய் தந்தையருக்காக பொய்யாக மகிழ்ச்சி காட்டி உடனே சரணை காண புறபட்டான் கார்த்தி.
கடிதத்தை சரணிடம் காட்டிவிட்டு கண்ணீரும் கம்பலையுமாக கடற்கரை மணலில் அமர்ந்திருந்தான் கார்த்தி.
“ஹேய்ய்ய்ய்........இந்த வேலைக்கு போனா.......என்னோட இருக்க முடியாதுன்னு வருத்த படுரியா.....?” இதுக்கு வருத்தப்பட என்னடா இருக்கு?” என்று கேட்டான் சரண்
“அப்பனா........நான் போனா உனக்கு கவலை இல்லையா?”
“அப்பனா..... எனக்காக இந்த வேலைக்கு போகாம இருக்க போறியா,?”” அடிவாங்குவ.... உங்கப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரயும்ல.....?”
“அதுக்காக என்னோட ஆசா பாசத்தலாம் வெருக்கனுமா நீ இல்லாம நான் எப்டிடா இருப்பன்...? அங்க போய்ட்டா நாம இப்ப இருக்குற மாதிரி பேச முடியாது பழக முடியாதுடா?”
“தங்கம் புரிஞ்சிக்கடா... எனக்காகடா....ஒரு வருஷம்தான் அதுக்குள்ள ஈசுக்கு ஒரு நல்ல மாப்புளையா பாத்து கல்யாணம் பண்ணி குடுத்துடுவண்டா... அப்புறம் கண்டிப்பா..... உன்கிட்ட வந்துடுவண்டா.....!!!!!!!! நாம அப்புறம் ஒன்னாவே இருக்கலாம் டா.... வேணா வெளிநாடு கூட போய்டுலாம்டா...எனக்காக இந்த வேலைக்கு நீ போடா..!!” என்று ஒரு வழியாக சம்மதிக்க வைத்தான்.
“அடுத்த வாரம் கழிச்சு சென்னைக்கு செர்டிபிகேட் காட்ட நாம் ரெண்டு பேரும்தான் போகணும் புரியிதா..? என்றுகூறி விட்டு இல்லத்திற்கு சென்றான் கார்த்தி.
அன்றிலிருந்து இரண்டாம் நாள் தடைகாலம் முடிந்து விசைப்படகுகள் ஒவ்வொன்றாக கடலுக்குள் சென்று கொண்டிருந்தன....புதிய படகுகள் எல்லாம் புதுமணப்பெண் போல அலங்கரிக்க பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு தயாராக இருந்தது.
ஐஸ் பெட்டிகள், உணவு பொருட்கள், டீசல் கேன்கள், உடைகள், வலைகள் என்று அத்தியாவசிய பொருட்களை ஏற்றி கொண்டு குறைந்தது பத்து பணியாளர்களையும் கூடுதலாக ராஜியும், சரணையும் ஏற்றி கொண்டு கரைக்கு விடை கொடுத்து மூவர்ண்ண கொடியை பட்டொளி வீசி பறக்க விட்டு கடலுக்குள் தன் முதல் பயணத்தை துவங்கியது ராஜின் புதிய படகு. கரையில் இருந்து தன் காதலனுக்கு கையசைத்து வழியனுப்பினான் கார்த்தி. கரை மறையும் வரை காதலன் நின்ற திசையை நோக்கி கொண்டிருந்த சரண் தன் செல்போனில் அலைவரிசை கிடைக்கும் வரை கார்த்தியிடம் பேசிகொண்டிருந்தான், இவனை போல மற்ற பணியாளர்களில் சிலரும் போனில் பேசிய படி இருந்தனர் சிலர் உறங்கி கொண்டு இருந்தனர்..
எங்கும் நீர்! எதிலும் நீர்! என்ற நீல கடலில் குறிப்பிட்ட தொலைவுகளில் பல விசைபடகுகள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். மீன்பிடி தடைகாலம் தற்பொழுதுதான் முடிவடைந்திருப்பதால் மத்திய பகுதிகளில் மீன்குஞ்சுகள் கூட்டம் கூடமாக நீந்தி கொண்டிருந்தை படகின் அடிபகுதியில் பொறுத்த பட்டிருக்கும் கருவிகள் காட்டி கொண்டிருந்தன.... பெரியமீன்கள் கூட்டம் எல்லாம் மன்னார் வளைகுடா பகுதியில்தான் இருக்கும் என்பதால் முதல் நாள் முழுவதும் வலையை கடலுக்குள் இறக்காமல் மன்னர் வளைகுடாவின் தொடக்க பகுதியான ஜெகதாபட்டினம் வரை விசை படகுகள் சென்றன. அங்கிருந்து வலையை இறக்கி தெற்கு நோக்கி பயணித்தால் பாடு அதிகமாக இருக்கும் என்பது அனைத்து மீனவர்களும் அறிந்த ஒன்று. அவ்வகையில் நம் படகிலிருந்தும் வலைகள் இறக்க பட்டு விட்டன....வலை முழுவதும் மீன் நிரம்ப இன்னும் மூன்று மணிநேரமாவது ஆகும் இதுதான் பணியாளர்களின் கடைசி ஒய்வு. வலை நிரம்பினால் மேலே இழுத்துவிட்டு அடுத்த வலையை இறக்க வேண்டும். பின் அகப்பட்ட மீன்களை தரம் பிரித்து குளிர்பெட்டிகளில் அடைத்து சேமிக்க வேண்டும் அதற்குள் அடுத்த வலை நிரம்பி விடும்.... உட்கார கூட நேரம் இருக்காது!
தடைகாலம் தற்பொழுதுதான் முடிந்ததால் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே மீன்கள் கிடைத்திருந்தன.. மூன்று நாட்கள் விடாமல் உழைத்ததால் அனைவரும் உடல் சோர்வடைந்து காணப்பட்டனர்.
சரணுக்கு கையெல்லாம் ஊறி இருந்தது உடல் உறக்கத்தையும், உள்ளம் கார்த்தியையும் தேடியது.. இப்பொழுது இறக்கியுள்ள வலைதான் கடைசி வலை. இதோடு கரைக்கு திரும்ப வேண்டியதுதான் என்ற கட்டத்தில் சிறிது ஒய்வு நேரம் கிடைத்தது சரணுக்கு. படகின் முனை பகுதிக்கு சென்று அமர்ந்து கொண்டான்.....
கண்கள் சற்று அயல முற்பட்டது ஆனால் மனமோ கார்த்தியை பார்க்க விரும்பியது சட்டென சட்டை பையில் கையை விட்டான். அங்கு ஒளிந்திருந்த செல்லுக்கு விடுதலை கொடுத்து அதில் சேமிக்க பட்டிருந்த கார்த்தியின் புகைப்படத்தை பார்த்தான்........ மனதுக்கு இதமாக இருந்தது..... உடனே அவனை கட்டி அணைக்க வேண்டும் போல இருந்தது. அந்த செல்போனையே கார்த்தியாக எண்ணி நெஞ்சில் அனைத்து கொண்டான் கண்கள் மூடியிருந்தும் ஓரங்களில் ஈரம் கசிந்ததது. கரைக்கு திரும்பியதும் கார்த்தியுடன் சேர்ந்து சென்னை செல்லயிருப்பதை எண்ணி மனதிற்குள் சுகபட்டான். ஆனால் இந்த சுகத்தை மேலும் அனுபவிக்க விடாமல் “கடார்” என்று படகின் மீது எதோ மோதும் சத்தம் கேட்டது....
பாறை ஏதும் மோதி விட்டதா.... என்று எண்ணி திடுக்கிட்டு எழுந்த பொழுது சக ஊழியர்கள் அனைவரும் கைகளை உயர்த்தி கொண்டு நிற்பது தெரிந்தது..
அதிர்ச்சியுடன் அவர்கள் நோக்கிய திசை நோக்கும் பொழுது அங்கு, இலங்கை கடற்படை ரோந்து படகுகள் இரண்டு அவர்களை சுற்றி வளைத்திருக்க ஒரு படகு இவர்களை நெருங்கி வந்து கொண்டிருந்தது. சுற்றி வளைத்திருக்கும் படகுகளில் இருக்கும் சிங்கள வீரர்களின் கரங்களில் வீற்றிருந்த துப்பாக்கிகள் துப்பிய மேலும் சில குண்டுகள் படகில்  மீண்டுமொருமுறை “கடார் “கடார் என்று ஓசையுடன் மோதிய இடத்தில் இருந்த தகரம் பொத்து கொண்டு கடல்நீர் படகினுள் குடியேற துவங்கியது!!. அதை பார்த்த ராஜின் கண்நீர் வெளியேற துவங்கியது.!! அதற்குள் அந்த படகு நெருங்கி வர அதிலிருந்த ஒரு சிங்கள வீரன் ஒருவன் சிங்களத்தில் எதோ கத்தும் குரலில் கூறினான்
ஓயாட்ட சிறிலங்கன் ஆண்டுவ போட்டிங் லைசன்ஸ் தியனுவாத? – (உங்களிடம் இலங்கை எல்லைக்குள் படகோட்ட அனுமதிப்பத்திரம் உள்ளதா?)
ஒயாட்ட ஆதார பலாபத்திர தியனுவாத? –( உங்களிடம் வாகனத்திற்கான வரிப்பத்திரம் உள்ளதா?)
பின் தமிழில் பேச துவங்கினான்.
 “உங்கட ஆளுகளுக்கு எத்தன தரம் சொன்னாலும் விளங்காதா..?” நீங்க அனைத்து பேரும் இந்திய எல்லைய தாண்டி இலங்கை எல்லைக்குள்ள ஊடாயிட்டிங்க. உங்கட அனைவரையும் இலங்கையின்ட கடற்காவல் படை கைது செய்யிது மரியாதையா சரணடயிங்க இல்லையிண்டா சுட்டு பிடிக்க வேண்டி வரும்”.
என்று அந்த ஆர்மிக்காரன் சொல்லி முடிக்கும் பொழுது, அனைவரும் பரிதவிக்கும் வேலையில் சற்றும் யோசிக்காமல் சரண் மட்டும் படகின் ஓட்டுனர் அறைக்குள் நொடி பொழுதில் நுழைந்து அங்கு எதையோ சோதித்து விட்டு திரும்ப வெளியில் வரும்பொழுது கடற்படை வீரர்கள் அனைவரும் இந்த படகிற்கு தாவி இருந்தனர். மிகுந்த எரிச்சலுடன் அதிலொருவன் சரணை ஓங்கி ஒரு அறை விட்டான்.
“எங்கேயடா போன?”
“எங்க ராடார் ல இன்னும் அஞ்சு நாட்டிகல் மைல் தாண்டுனாதான் இலங்கை எல்லை இருக்குனு சொல்லுது நீங்க எங்கள அரெஸ்ட் பண்றது தப்பு.
 என்று கூறி முடிப்பதற்குள்” அருகில் இருந்த சிங்களவன் ஒருவன் “என்னடா அதிகமா பேசுற? நெருங்கி வந்துட்டிங்கல்ல? அப்புறமென்ன? என்று பேசிக்கொண்டே தன் கையில் இருந்த துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்த அதிலிருந்து வெளிப்பட்ட தோட்டா சிறிதும் ஈவு இறக்கம் இன்றி சரணின் நெஞ்சை துளைத்து கொண்டு வெளியேறியது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தவனை தாங்க முற்பட்ட ராஜின் தோளில் ஒரு குண்டு சென்று பதுங்கி கொண்டது. இதற்குள் குதிகால் நனையும் அளவிற்கு படகில் நீர் புகுந்ததால் மாண்டு போனதாக கருதிய சரணையும் ராஜையும் மட்டும் விட்டு விட்டு ஏனைய மீனவர்களை கைது செய்து ஏற்றி கொண்டு, நான்கு நாட்களாக உயிரை வெறுத்து பிடித்த மீன்களை பெட்டிகளோடு தூக்கி கொண்டு, வலைகளை அறுத்து சின்னாபின்னமாக்கி விட்டு சிங்கள வீரர்கள் சென்று விட்டனர். இதே நிகழ்ச்சி அங்கு மேலும் சில படகுகளுக்கும் அரங்கேறியது.
சிறிது நேரத்தில் வலியால் துடித்த படி கண்விழித்த ராஜூ இடுப்பளவு தண்ணீர் படகில் இருப்பதை உணர்ந்தான் பின் அருகில் பிணமாக சரண் செத்து மிதப்பது கண்டு அதிர்ந்தான்,அழுதான். இன்னும் சிறிது நேரத்தில் கடலில் மூழ்கி இறக்க போகிறோம் என்ற வேதனையை விட சரணின் மரணம்தான் அவனை வாட்டியது. தண்ணீர் தோளளவு வரும்பொழுது “கடல் புறா காரைக்கால் ” என்று எழுத பட்டிருந்த படகு அவரகளை நெருங்கியது. நிலைமையை உணர்ந்த காரைக்கால் மீனவர்கள் ராஜுவையும் சரணின் உயிரற்ற உடலையும் ஏற்றி கொண்டு நாகை நோக்கி பயணமானார்கள்.
ஆசையாசையாய் பார்த்து பார்த்து கட்டிய புதுபடகு கடலில் மூழ்கிய காட்சிதான் ராஜுவிற்கு கடைசியாக தெரிந்தது. பின் அதிக ரத்த போக்கால் மயக்க நிலையை அடைந்து விட்டான்.
மறுநாள் காலை எப்பொழுது தான் ஆசை நாயகன் வருவான், வந்த உடன் அவனை கூட்டி கொண்டு சென்னை போகும் போது என்ன என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டே டிவி ரிமோட்டை அழுத்தி கொண்டிருந்த கார்த்தி செய்தி தொலைக்காட்சிகள் அனைத்தும் “சற்று முன் : இலங்கை கடற்படை அட்டூழியம்; நாகை, காரைக்கால்,ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேர் சுட்டு கொலை, ஐம்பதுக்கும் அதிகமானோர் கைது, வலைகள், படகுகள் சூறையாடல் என்ற செய்தியை கண்டு அதிர்ந்தான். பின் அவசர அவசரமாக  வெளியேறிய பொழுது அதுவரை தூறி கொண்டிருந்த வானம் அடித்து பெய்ய துவங்கியது. மழையில் நனைந்து கொண்டே வண்டியை செலுத்தியவனுக்கு இதயத்தின் ஓசை இடி போல காதுக்கு கேட்டது, பழைய பேருந்து நிலையத்தை தாண்டும் பொழுது பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் தென்பட்டது
“ஐயோ நெல்லுகட மகமாயி என் தங்கத்துக்கு ஒன்னும் ஆயிருக்க கூடாது அவன் நல்ல படியா வந்திருக்கணும், “ என்று பிடித்த தெய்வம் பிடிக்காத தெய்வம் என அனைத்து தெய்வங்களுக்கும் கோரிக்கை விடுத்த படி துறை முகத்தை அடைந்தான். நகரே பரபரப்பாக இருந்தது. துறைமுக அலுவலக வளாகத்தில் கூட்டம் கும்மி அடித்தது உயிரை கையில் பிடித்து கொண்டு கூட்டத்திற்குள் நுழைந்தான்.
அங்கு தலைவிரிகோலமாய் அழுது கொண்டிருந்த ஈஸ்வரி, கார்த்தியை பார்த்ததும் “அண்ணே! அனாதயாயிட்டன்னே!!! அண்ணன் நம்மாள விட்டு போய்ட்டுன்னே....!! என்று ஓடி வந்து கார்த்தியை கட்டி பிடித்து கொண்டு அழுதாள்.
அதிர்ந்து நின்ற கார்த்திக்கு அழுகை கூட வரவில்லை!! பின் போய்டியாடா? என்ன விட்டு போய்ட்டியாடா......? கேட்டமாதிரியே போய்ட்டியாடா? இனிமேல் நான் என்னடா பண்ண போறன்? என்று அங்கு கிடந்த கல்லும் கரையும் படி கண்ணீரை கொட்டி தீர்த்தான். நம்மை விட அதிக நீரை மண்ணுக்கு தருகிறான் என்று வானம் நினைத்ததோ என்னவென்று தெரியவில்லை பெய்த மழை கூட நின்று விட்டது.
வெட்டுக்கத்தி போல கடலுக்குள் சென்று இப்பொழுது கட்டுத்துணியால் சுற்ற பட்டிருக்கும் சரணின் முகத்தை மண் மூடும் வரை கண் மூடாமல் பார்த்து கதறி விட்டு தன் உயிரை உதறி விடும் நோக்கத்தில் கடைசியாக ஈஸ்வரியை பார்க்க காதலன் வாழ்ந்த கனவு மாளிகை நோக்கி சென்றான். இவனை கண்டதும் ஈஸ்வரி மீண்டும் ஓடி வந்து கட்டியணைத்து அழுதாள்.
“கார்த்திண்ணே...... எனக்கு இனிமே யாருண்ணே இருக்கா? “ எனக்கு ஒரு பாசாலம் வாங்கி குடுண்ணே நானும் செத்து போயிடுறன்
இந்த வார்த்தை கார்த்தியின் காதுகளில் சுடுநீரை ஊற்றுவது போல இருந்தது. இவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்னு தானே அவ்வளவு கஷ்ட்டபட்டான் இப்ப இவள நிராதரவா விட்டுட்டா என் சரண் என்ன பத்தி என்ன நெனைப்பான். என்று மனதிற்குள் நினைத்தவன் ஈஸ்வரியை வண்டியில் ஏற்றி கொண்டு வீடு நோக்கி விரைந்தான். போகிற வழியில் அவுரிதிடலில் இலங்கை கடற்படைக்கு எதிராக பிரமாண்ட உண்ணாவிரத போராட்டம் துவங்க பட்டிருந்தது. அங்கு எதிர்பட்ட அவனது தந்தையிடம் ஈஸ்வரியை ஒப்படைத்து
“இன்னைலருந்து உங்களுக்கு ஒரு மகன்,ஒரு மகள். வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என் தங்கச்சிக்கு ஒரு கல்யாணம் பண்ண வேண்டியது என் பொறுப்பு “
என்று கூறி விட்டு உண்ணாவிரத பந்தலுக்கு சென்று அங்கு வைக்க பட்டிருந்த ஒலி வாங்கியில் இலங்கை ராணுவத்தையும், இந்திய அரசாங்கத்த்யும் கண்டித்து பேச துவங்கினான். சரணை இழந்த வெறியும், அப்பாவி மீனவர்கள் மீது இருக்கும் பரிதாபமும், காதலனை பறித்த கயவர்களின் மீதுள்ள கோபமும் வீரியம் மிகுந்த சொற்களாய் வெளிபட்டது. அவனது பேச்சு இன்று காற்றில் கரையலாம்; ஆனால் அது ஆதிக்கத்தின் கதவை உடைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. மணிப்பூருக்கு ஒரு இர்ரோம் ஷர்மிளாவை போல, தண்டகாரண்யத்துக்கு ஒரு மேத்தா பட்கர் போல, இடிந்த கரைக்கு ஒரு உதயகுமார் போல நசுக்கப்படும் மீனவர்களுக்கு சரண் ஆசை பட்டது போல ஒரு கார்த்தி கிடைத்து விட்டான். வலிகள் விதைக்கும் விதையில்தானே போராளிகள் முளைக்கிறார்கள். ஏன் அது காதல் வலியாக இருக்ககூடாதா?

                   -நிறைந்தது


























































































சனி, 20 ஜூலை, 2013

வாலி எனும் இறவா புகழ் கொண்ட ஏந்தல்





    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் 

என்ற தேவகானம் கேட்காதவர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் அரிது.

ஒரு அஞ்சல் அட்டையில் மேற்கண்ட படலை எழுதி டிஎம்எஸ்க்கு அனுப்பி விட்டு காத்திருந்தாராம் கவிஞர்.

அப்பாடலை இசையமைத்து பாடி வெளியிட்டு விட்டு அதற்கான

சன்மானம் பதினைத்து ரூபாயுடன் சேர்த்து சென்னைக்கு வர

சொல்லி கடிதம் எழுதினாராம் பாடகர்.


        அன்று திருவரங்கத்தை விட்டு கிளம்பி திரையுலகத்திற்கு வந்தவர்

இன்று தரையுலகம் தவிர்த்து இறையுலகம் சென்றுவிட்டார். அவர்தான்

என்றும் அழியா புகழை கொண்ட கவிஞர் வாலி அவர்கள். 


" வெள்ளுடை தரித்து வெளிர் மயிர் தாடியோன் சொல்லுடைத்து எழுத
துவங்கினால்; கல்லுடையும் அதிலிருந்து கனிச்சாறு கொட்டும்,
எள்ளுடையும் அதிலிருந்து எண்ணெய்க்கு பதில் எண்ணங்கள் கொட்டும்,
கொட்டியதை கோர்த்தெடுத்தால்! கள்ளுடைய பானை போன்ற மயக்கம் தரும்.!"

ஒன்றுமே அறியாத எனக்கே இத்தனை எதுகை மோனையுடன்

எழுத்து வருகிறதென்றால் அதற்கு காரணம் கவிஞர் வாலி அவர்களின்

எழுத்துக்கள்தான். கவிஞர் வாலி போல தமிழின்

எதுகை மோனைகளை அதிகம் பயன் படுத்தியவர்கள் இருக்க முடியாது.

உடலுக்கு வயதாகும் உள்ளத்திற்கு வயதாகாது என்று நிரூபித்தவர் அவர். 

இளமையில் கற்பனை என்றாலும் என்று முருகனை புகழவும் தெரியும்,

முதுமையில்

கலாசலா கலசலா என்று மல்லிகா செராவத்தை வர்ணிக்கவும்  தெரியும்

அவருக்கு.

     பெரிய பெரிய காண்டங்களாக சாமானியர் படிக்க முடியாத

ராமாயணத்தையும் பாகவதத்தையும் மகாபாரதத்தயும் சாத்திரம் 

அறிந்த சாதகர் முதல் பாத்திரம் திருடும் பாதகர் வரை தன்

பேனா முனையால் கட்டி இழுத்து படிக்க வைத்த பெருமையும் கவிஞர்

வாலி அவர்களையே சாரும்,

ஆனந்த விகடனில் எளிய தமிழில் கிருஷ்ண விஜயம் எழுதினர் அதனால்

ஆத்திகர் இல்லம் முதல் நாத்திகர் இல்லம் வரை கிருஷ்ணனே விஜயம்

செய்தார்.ரகுராமன் கதையை அவதார புருஷனாக்கினார்,

பாரதத்தை பாண்டவர் பூமியாக்கினார்.  வாலியின்

எதுகை மோனைகளை கையாளும் விதத்தையும் அவ்ருக்கிருந்த

சொற்புலமையும் மேற்கண்ட நூல்களில் இருந்து அறிந்து கொள்ள

முடியும், உதாரணமாக சுருங்க சொல்லி விளங்க வைப்பதில்

அவருக்கு இணை அவர் மட்டுமே..... பாண்டவர் பூமியில்

பாஞ்சாலி துகிலுரியப்படும் சமயம் கண்ணனை அழைக்கும் காட்சியில்

திருமாலின் அவதாரங்களை அழகாக வரிசை படுத்தி இருப்பார். அந்த

பத்தியை உங்களுக்காக போடுகிறேன் படியுங்கள் பின் களியுங்கள்.
  
  கண்ணா! கண்ணா! கமலபூங்கண்ணா!

  வண்ணா! வண்ணா! வானமழை வண்ணா!

  உண்ணா உலர்ந்திட உன்பேர் அழைத்தேன் (உண்ணா – உள் நாக்கு )

  அண்ணா! அண்ணா! அபயம்! அபயம்!.

 

  தூணை பிளந்து ஒரு தூய நரசிங்கமாகி (நரசிம்ம அவதாரம்)

  ஆணை பிளந்தவனே! அபயம்! அபயம்!. (இரண்யகசிபு மார்பை பிளத்தல்)



  நெடியான் என நின்று நீனிலத்தை ஒருமூன்று (வாமன அவதாரம்)

  அடியால் அளந்தவனே! அபயம்! அபயம்!. (உலகை மூன்றடிய்ல் அளந்தது)



  தூமையாய் கிடந்த கடல் தயிராய் கடைவதற்கு (கூர்ம அவதாரம்)

  ஆமையாய் கிடந்தவனே! அபயம்! அபயம்!. 



  ஊனம் குடிபுகுந்த உள்ளத்தால் சொல்கேட்டு (கைகேயி)

  மீனம் குடிபுகுந்த மைவிழியால் கைபற்றி (சீதை)

  கானம் குடிபுகுந்த காகுந்தா! (வனவாசம்)

  கற்புடையாள் மானம் குடிபுகுந்த மேனியினை காவாயோ!
 

இது ஒரு உதாரணம் தான் படிக்க படிக்க தமிழின் மீது காதலை உருவாக்கும் எழுத்துக்கள் கவிஞர் வாலியினுடயது.

கற்பகம் திரைப்படத்தில்

“கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போவதில்லை“
“மண்ணை விட்டு போனாலும் மனதை விட்டு போவதில்லை

என்று அவர் எழுதிய வரிகள் அவருக்கே பொருந்தி விட்டது. இன்று இந்த
மண்ணுலகை விட்டு அவர் விடை பெற்றாலும் அவர் கொடுத்த படைப்புகள் தமிழுள்ள வரை நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

இறுதியாக!
அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்கெல்லாம்  
பெருமை!
  இவர் வீழ்ந்த காரணத்தால் தமிழுக்கே ஏற்பட்டது தீராத
  வறுமை!

அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி அவரது படைப்புகளை படிப்பதும் பாதுகாப்பதும்தான் 


என்றும் நட்புடன் 

ராஜ்குட்டி காதலன் 

வியாழன், 4 ஜூலை, 2013

தேவதூதனின்.......... காதலன்........{ நிறைவு பகுதி}


கீழ்வானத்தில் புறப்பட்ட போது இன்முகத்துடன்  இளவெயிலை இறைத்து கொண்டு இருந்த கதிரவன், சற்றே மாறி மெல்ல மேலேறி வன்கதிர்களால் முறைத்து கொண்டிருந்த அந்த காலை பொழுதில் பறவைகளின் இனிய ஓசை அந்த பகுதியையே சொர்க்கம் போல மாற்றியிருந்தது. பல ஏக்கர் அளவில் பயிரிட பட்டிருந்த யூகலிப்டஸ் மரங்களும், சவுக்கு மரங்களும் போதிய இடைவெளியில் வளர்ந்திருந்தன. வெளியில் இருந்து பார்க்கும் போது அடர்வனமாக காட்சி அளித்தாலும் . உள்ளே வந்தால் மிகவும் ரம்மியமாக காட்சி அளித்ததோடு தைலவாசனையும் தூக்கலாக பரப்பி கொண்டு இருந்தது அந்த காடு. யூகலிப்டஸ் மரங்கள் எவ்வளவு நீர் இருந்தாலும் உறிஞ்சி கொள்ளும் திறன் பெற்றிருப்பதால் தரை மிகவும் காய்ந்து காணப்பட்டது. தன்னை நாடி வருபவர்களின் பாதங்களை காய்ந்த தரை நோக செய்யுமோ என்று மரங்கள் நினைத்தனவோ என்னவோ தெரியவில்லை உதிர்ந்த தன் சருகுகளால் வைக்கும் அடி தரையில் படா வண்ணம் மெத்தை போன்ற அமைப்பை ஏற்படுத்தி இருந்தது. அழகுக்கு அழகு சேர்ப்பது போல ஆங்காங்கே உதிர்ந்த மயில்களின் இறகுகளும் கிடந்தன. இந்த ரம்மியமான சூழலை ரசிக்க மாட்டதவனாய் அங்கிருக்கும் அமைதியை குலைத்து கொண்டு காய்ந்த சருகுகளுக்கிடையே “சர சர” என்று ஓசை எழுப்பியவாறு ஓடி வந்து கொண்டிருந்தான்  அகஸ்டீன். இந்த ஓசையால் பயந்து அங்கு மேய்ந்து கொண்டிருந்த இரண்டு ஆண் மயில்கள் தெறித்து பறந்தன.
“அகஸ்சு டேய் நில்லுடா....... டேய்,,,,,,,,,” நான் சொல்லுறத கேளுடா என் மேல எந்த தப்பும் இல்லடா புரிஞ்சிக்கடா ப்ளீஸ்டா” என்று கத்தியவாறே பின்னால் ஓடி வந்து கொண்டிருந்தான் வினய்.
என்ன நோக்கத்தில் ஓடுகிறான் என்று அவனுக்கே தெரியாமல் தான் ஏமாற்றபட்டு விட்டோம் என்ற எண்ணத்திலும், தனக்கே உரிமையான வினய்யின் உடலை வேறொருவன் தீண்டிய ஆற்றாமையாலும் வேகமாக கண்ணீரை காற்றில் கரைய விட்டு ஓடினான் அகஸ்டீன். இருந்தாலும் அவனை விட வேகமாக ஓடிவந்து அகஸ்டினின் கையை பிடித்து இழுத்து நிறுத்தினான்.

“ ச்சீ என்ன தொடாத அவன தொட்ட அந்த கையாள என்ன தொடாத” ஐயோ எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்கே நான் என்ன பண்ணுறதுன்னு தெரியலையே இப்புடி ஏமாந்துட்டனே என்னனமோ கற்பனை பண்ணிக்கிட்டு திருச்சி வந்தனே இப்புடி ஏமாந்துட்டனே? என்று வினய்யின் கையை உதறி தள்ளி விட்டு தலையில் அடித்து கொண்டு அழதுவங்கியவன். “பொளேர்” என்று ஒரு அரை கன்னத்தில் விழவும் அதை தாங்க மாட்டாதவனாய் ஓடிசென்று சருகுகளுக்கிடையில் விழுந்து எழுந்தான்.
மிகுந்த கோபத்துடனும் ஓடிவந்த வேகத்திலும் ஒரு சேர விட்ட அரை காரணமாக கையில் ஏற்பட்ட விரு விருப்பை குறைக்கும் வண்ணம் கையை உதறிகொண்டே பேச துவங்கினான் வினய்.
“உன்னைய என்னனமோ நெனச்சனேடா!! நீயும் ஒரு சராசரி ஆளுங்குரத நிரூபிச்சிட்டடா. என்ன போய் எப்டிடா உனக்கு சந்தேக பட தோணுது? அதும் ஹரீஷோட போய் நான் அப்டி செய்ய முடியுமாடா அவன் என் பிரண்டா.
“ ச்சீ வாய மூடு அதான் உங்க லீலயலாம் கண்ணால பாத்தனே இதுக்கப்பறம் என் போய் சொல்லுற? நீ ஜட்டியோட படுத்திருந்ததும் அவன் கீழ உக்கந்திருந்ததும் நெனைக்கவே அருவருப்பா இருக்கு/? இனிமேல் என் மூஞ்சிலியே முழிக்காத மொதல்லஇங்கருந்து போ”
என்ன பேசுகிறோம் என்பதை உணர கூட இயலாதவனாய் ஆத்திரம் கண்களை மறைத்தது அகஸ்டீனுக்கு. விழிகளில் வழியும் நீரை துடைத்து கொண்டே வினய் பேச துவங்கினான். அளவு கடந்த ஆத்திரத்தால் வார்த்தை குழறியது.
“டேய் ரொம்ப பேசுறடா நீ....... நான் பேசுனா தாங்க மாட்டடா” இவ்ளோ பேசுறியே அவன் கீழ உக்காந்துருக்கும் போது அவன் கையில என்ன இருந்துதுன்னு பாத்தியாடா? என்று தான் போட்டிருந்த லோவேரை கழட்டினான்.
“பாருடா என் தொடைய பாரு”
தொடையில் உள்ளங்கை அகலத்தில் கொப்பளித்து இருந்தது.
“என்ன பாக்குற ஒன்னும் புரியலையா முந்தாநாள் ப்ராக்டீஸ் பண்ணும் போது கையிலிருந்து நெருப்பு பந்து தவறி என் தொடையில விழுந்துட்டு. உடனே பேன்ட் எரிஞ்சி தொடை புண் ஆய்ட்டு. இந்த விஷயம் உனக்கு தெரிஞ்சா இந்த திருச்சி வர ப்ரோக்ராமே நீ கேன்சல் பண்ணிடுவனுதான் மறைச்சேன். இந்த ப்ரோக்ராம்னால் நீ எவ்ளோ எதிர் பார்ப்போட இருந்திருப்பனுதான் மறைச்சேன். அதுனாலதான் மொத நாள்லேருந்து உன்ட்ட சரியா பேசுல. இன்னும் சொல்ல போன நைட் நடக்க போற காம்பெடிஷன்ல நான் ஆட போறதும் இல்ல நான் உனக்காகத்தான்டா வந்தன் உன்னோட ப்ரோக்ராம் முடிஞ்சதும் உண்ட சொல்லலாம்னு இருந்தாண்டா என்ன போய் இப்டி சந்தேக படுரியேடா? அந்த ஹரீஷுக்கு இருக்குற அக்கறை கூட உனக்கு இல்லையேடா. புன்னு சீக்கிரம் ஆரனும்னு கிச்சன்ல போய் நெய் வாங்கிட்டு வந்து மயிலிறகால தடவிகொடுத்தான்டா. அப்ப கூட அவன் உனக்காக தாண்டா வருத்த பட்டான் இவ்ளோ பெருசா கொப்புளிசிருக்கே நீ எப்புடி தாங்க போறன்னு? எங்கள போய் சேத்து வெச்சு சந்தேக படுரியேடா?”..
ஒரே மூச்சில் சொல்லி முடித்துவிட்டான் வினய் ஆனால் இனி எந்த மூஞ்சை வைத்து கொண்டு அகஸ்டீனால் பேச முடியும். கொட்டிய நெல்லை கூட்டி அள்ளி விடலாம், ஆனால் யோசிக்காமல் கொட்டிய சொல்லை அல்ல முடியுமா....? அகஸ்க்கு தலை சுற்றுவது போல இருந்தது. வினய்யின் காலை நினைத்து வேதனை படுவதா, தனது அறியாமையை நினைத்து வெம்புவதா, இல்லை இந்த பிரச்சனயில் கூட தனக்கு சாதகமாக காய் நகர்த்தி இருக்கும் ஹரீசை நோகுவதா? பத்து தலை கொல்லி எறும்பாக தவித்தான் அகஸ்ட்டீன். இருந்தாலும் மனதை தேற்றி கொண்டு ஒருவாறாக பேச துவங்கினான்
” சாரிடா வினய் நான் யோசிக்காம தப்பு செஞ்சிட்டண்டா என்ன உன் செருப்ப கழட்டி அடிடா வாங்கிக்கிரன் என்று குனிந்து வினய்யின் புண் பட்ட இடத்தை தழுவ முயன்றான்”
அதற்குள் விலகி கொண்ட வினய் மன்னிப்பா.... உன் மூஞ்சிலையே முழிக்காதனு சொல்லிட்டு மன்னிப்பா கேக்குற மன்னிப்பு..... இதுக்குலாம் தகுந்த தண்டணைய நீ அனுபவிக்க வேணாம்?. உன் மூஞ்சிலையே இனிமே முழிக்க நான் தயார இல்ல நான் போறன் நீ இருந்து நல்லா திருச்சிய சுத்தி பாத்துட்டு வா என்று கூறி விட்டு திரும்பவும் அங்கு ஹரீஷ் வரவும் சரியாக இருந்தது. அவனை கடந்து வேகமாக அரை நோக்கி நடக்க தொடங்கிவிட்டான் வினய்.
பேச்சு குரல் கேக்காத தொலைவை அவன் கடந்ததும் கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்த அகஸ்டீனுடன் பேச துவஙகினான் ஹரீஷ்.
“என்னடா ஹீரோ பெரிய பூகம்பமே வெடிசுட்டு போல எப்புடி உன்னாலயே உன்ன கெட வச்சன் பாத்தியா........? உனக்கு ஒரு போன் கால் வந்திருக்குமே வினய்யை விட்டு போன்னு!! அத கேக்காம இன்னும் ஆட்டம் போட்டில அதுக்குதான் இந்த சாம்பிள்.” ரெண்டுநாளா வினய் உண்ட சரியா பேசலங்கற விஷயமே நேத்தி ட்ரைன்ல வரும்போதுதான் எனக்கு தெரிஞ்சிது. அவன்ட்ட விசாரிச்சப்பத்தான் புன்னு பட்ட விஷயத்த அவன உண்ட சொல்லலனு எனக்கு தெரிஞ்சிது இது போதாதா எனக்கு. அப்பவே இந்த அசைன்மெண்டுக்கு பிளான் போட்டன் வெற்றிகரமா முடிச்சிட்டன்” இப்பவும் சொல்லுறன் கேட்டுக்க நீ என்னதான் இதுக்குமேல என்ன பத்தி வினய்கிட்ட சொன்னாலும்’ சொல்றது என்ன அவன்தான் இனிமேல் உன் மூஞ்சிலையே முழிக்க மாட்டானே சோ நான் என்ன சொல்றன்னா போய் உன் பெட்டி படுக்கயலாம் கட்டிக்கிட்டு மரியாதையா காரைகாளுக்கே நடைய கட்டு நான் போய்ட்டு வாரன் “ அவனும் சொல்லி விட்டு கிளம்பினான்.
ஏற்கனவே சபரிமலை கற்பூர ஆழி போல கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அகஸ்டினின் மனது இப்போ ஹரீஷ் குடம் குடமாக கொட்டிய நெய்யின்  பொருட்டு வானளாவி வளர்ந்தது. அந்த தீயின் வேகம் காலுக்கு பரவி எப்படியாவது வினய்யை சமாதான படுத்தி விட வேண்டும் என்ற நோக்கில் வேகமாக ஓட துவங்கினான். ஆனால் என்ன பயன் அதற்குள் வினய் அறையை காலி செய்து விட்டு கிளம்பி விட்டான்
ஏதோ ஒரு நம்பிக்கையில் அகஸ்டீன் வினய்யின் செல்லுக்கு தொடர்பு கொண்டான் ஆனால் அது எதிர்பார்த்த மாதிரியே அனைத்து வைக்க பட்டிருந்தது. உடன் சற்றும்
தாமதிக்காமல் தன குழுவினரிடம் சென்று தன்னுடைய இயலாமையை கூறி விட்டு அறைக்கு வந்து வாரி சுருட்டி கொண்டு கிளம்பினான். எப்படி இருந்தாலும் மாயவரம்தான் போயிருப்பான் என்ற எண்ணம் மட்டும் அவனுக்கு கல்லிளிட்ட எழுத்து போல நம்பிக்கையாக இருந்தது. மிகுந்த மனவலியுடனும் ஏக்கத்துடனும் சுய வெறுப்பின் காரணமாகவும் கண்களை குளமாக்கிய வண்ணம் இரவு பத்து மணி அளவில் மயிலாடுதுறை வந்து இறங்கினான். திருச்சியில் புறப்பட்டு மயிலை வரும் வரை ஒரு நிமிடம் விடாமல் வினய்யின் போனுக்கு தொடர்பு கொண்டதில் அந்த செல்லுக்கு வாயிருந்தால் அழுதிருக்கும்.!!!!! மனிதர்களிடம் மாட்டிகொண்டு தவிக்கும் சில பொருட்களில் இந்த செல் போனுக்குதான் முதலிடம் கொடுக்க வேண்டும். காதல் ஆரம்பிக்கும் பொழுது கன்னம் சூடாகும் வரை பேச வேண்டியது, ஊடல் பொழுதுகளில் தரையில் வீசி கோபத்தை தணிப்பது, படுக்கையில் அருகில் வைத்து கொண்டு மேலே ஏறி உருண்டு நசுக்குவது, மெசேஜ் அனுப்புகிறேன் பேர்வழி என்று பாக்கு போடுபவனின் பல் போல இருக்கும் விசை பலகையை தேய்த்தே பச்சிளம் குழந்தையின் பல் போல வெள்ளையாக்கி வைப்பது என்று எத்தனை அநீதிகளை இழைத்தாலும் இருந்தாலும் எப்படி  தாங்கி கொண்டு நமக்காக உழைக்கிறது இந்த செல்போன்கள்’
சரி கதைக்கு வருவோம்!! வினய் இங்குதான் வந்திருப்பான் என்று மனம் சொன்னாலும் அறிவு ஏன் அவன் தஞ்சாவூர் போயிருந்தா என்ன பண்ணுவ? வீடு பூட்டி இருந்தா இப்ப நாடு ரோட்டுலதான் நிக்கனுமா? என்ற கேள்விகளுடன் நடந்தே மாடிபடியருகில் வந்தான். மேலே லைட்  எரிந்து கொண்டு இருந்தது. மெல்லிதாக
“அமைதியில்லாத நேரத்திலே அந்த ஆண்டவன்  எனையே படைத்து விட்டான்” என்று பீபி ஸ்ரீனிவாஸ் பாடிகொடிருந்தார்.
“அப்பா,,,,,,,,, வீட்லதான் இருக்கான்!!! என்ன  இருந்தாலும் அவனுக்கு நான் கஷ்ட்டபடக் கூடாதுங்குற எண்ணம் இருக்கு அதான் இவ்ளோ போராட்டதுலயும் வீட்டுக்கு கரக்டா  வந்துட்டான் என்று எண்ணி கொண்டே உள்ளே சென்றான்.”  உள்ளறையில் எட்டி பார்த்தான் கட்டிலின் மீது அமர்ந்து கொண்டு லேப்டாப்பில் எதையோ நோண்டி கொண்டு இருந்தான் வினய்.
எப்படியாவது சமாதான படுத்திடணும் அவன் கால்ல விழுந்தாவது இயல்பு நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைத்து கொண்டு மெல்ல வினய்யின் அருகில் நெருங்கினான் அகஸ்டீன்.
அருகில் வரும்வரை காத்திருந்து விட்டு  பிடிப்பதற்கு வாலருகே கையை கொண்டு செல்லும் போது விருட்டென்று பறக்கும் தட்டான் பூச்சி போல அகஸ்டீன் அருகில் வந்ததும் வாயை பிளந்து கொண்டிருந்த லேப்டாப்பின் தலையில் படீரென்று அறைந்து மூடிவிட்டு எழுந்து சென்று விட்டான் வினய். உடனே தன முயற்சியில் சற்றும் மனம் தளராமல் பின் தொடர்ந்து சென்று வினய்யின் கையை பிடித்து இழுத்து நிறுத்தினான்.
“டேய் வினு என்ன எவ்ளோ வேணாலும் அடிச்சிக்க திட்டிக்கடா.ஆனா பேசாம மட்டும் இருக்காதடா ப்ளீஸ்டா.......!!!!!!!!” கெஞ்சினான்
”..........”
“நான் பண்ணது தப்புதாண்டா அதுக்குதான் விட்டுடு வந்துட்டியே இந்த தண்டன போதும்டா என்ட தயவு செஞ்சி பேசுடா..........”
“..............”
வினய் இப்பொழுது அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். உடனே அவனது காலை தொட்ட வண்ணம் தரயில் அமர்ந்து கொண்டு பேசதொடங்கினான்.
” ச்ச்சச்ச்ச்ஸ் எவ்ளோ பெரிய கொப்பளம் எப்டிடா தங்கம் தாங்குண? நல்ல வேளை கொப்பலத்தோட போனுதே....!!!!! என்று ஆறுதலாக தடவ முயன்றான்.
இதனை சற்றும் விரும்பாத வினய் அவனை பிடித்து தள்ளி விட்டு மேசையின் மீது கிடந்த பேனாவை எடுத்து தொடையில் உள்ள கொப்பளத்தை குத்தி கிழித்தான். உடனே அதிலிருந்து நீர் வழிந்து ஓடியது, அதன் மீது போர்த்தி இருந்த மெல்லிய தோலை பிய்த்து எடுத்தான் பின் எரிச்சலில் துடித்த படி பேச துவங்கினான்
”இன்னொரு வார்த்தை என்ட பேசுன.? கத்திய பழுக்க வெச்சு இது மேலே வெச்சுப்பன் மரியாதையா எழுந்து போய்டு” கோபம் கண்களை மறைத்தது. கண்களில் வழியும் நீரை துடைத்த படியே தேம்பிய வண்ணம் மாடி படியில் சென்று அமர்ந்தான்  அகஸ்டீன். அழுது பிரயோஜனம் ஒன்றும் இல்லை காலையில் ஒருகணம் நின்று யோசித்திருந்தால் இந்நேரம் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்து அதில் திருச்சியையே விலைக்கு வாங்கி இருக்கலாம் விதி யாரை விட்டது?
நேரம் ஆனது பதினொன்று, பனிரெண்டு என்று. நிமிடத்திற்கு பத்து வண்டிகள் கடக்கும் சாலை ஆளரவமின்றி கிடந்தது. மெல்லிய தூறல் விழுவது போல் இருந்தது. விளக்குகள் அணைக்க படாமல் எரிந்தன அழுது அழுது கண்களுக்கே அலுத்து போயிருக்கும். இனி நடப்பது தானே நடக்கட்டும் உப்பை தின்னவன் தண்ணி குடிக்கணும் தப்பு செஞ்சவன் அனுபவிக்கனும் அவன் கோவத்துலயும் நியாயம் இருக்கு என்று நினைத்த வண்ணம் விளக்கை அனைத்து விட்டு படுக்கை அறைக்கு வந்தான். சுவற்றை பார்த்த வண்ணம் தன் அகன்ற முதுகை காட்டிக்கொண்டு கட்டிலில் படுத்திருந்தான் வினய்.
அருகில் சென்று சந்தடியில்லாமல் படுத்தான். வினய் மூக்கை உறிஞ்சும் சத்தம் கேட்டது. ‘’ஓஹோ நீயும் இன்னும் தூங்கலையா அழுதுட்டு வேற இருக்க போல” என்று நினைத்த கொண்டே தன்னை அறியாமல் வினய்யை தொட சென்ற கையை இழுத்து கொண்டான் கோவமா இருக்கான் திரும்ப எதுக்கு பிரச்சன பன்ணிகிட்டு என்று நினைத்து கொண்டான். வெளியில் மழை அடித்து பெய்ய துவங்கியது.
நாளைய பொழுது இருவருக்கும் மறக்க முடியாத பொழுதாக விடிய போவதை அறியாமல் இருவரும் உறங்கினர்.
மறுநாள் காலை அகஸ்சை விட விரைவக எழுந்து அவனுடைய முகத்தை கூட பார்க்காமல் சீக்கிரமாக கிளம்பி பேருந்தில் கல்லூரிக்கு சென்று விட்டான் வினய். வண்டியில் சென்றால் அகஸ்ச்சை விட்டு செல்ல முடியாது என்பதால்தான் வினய் பேருந்தில் சென்றான் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை!!
பலவாறு யோசித்த வண்ணம் மெதுவாக கிளம்பி கல்லூரிக்கு போய் சேர்ந்தான் அகஸ். போட்டிக்கு சென்றவர்களெல்லாம் மதியம்தான் வருவார்கள் எனும் பொழுது இவர்கள் இருவரும் முன் கூட்டியே வந்திருப்பது அவரவர் நட்ப்பு வட்டாரத்தில் கேள்விகளை எழுப்பினாலும் ஒருவாறு சமாளித்தனர். அகஸ்டீன் சிலம்புவிடம் நடந்தெதெல்லாம் கூறி ஒருவாறு ஆறுதல் அடைந்தான்.
அன்று மாலை பங்கிற்கு விடுப்பு சொல்லி விட்டு எப்படியாவது சமாதன படுத்தி விட வேண்டுமென்ற நோக்கில் அகஸ் வீட்டிற்கு சென்று விட்டான் ஆனால் வினய் இரவு எட்டு மணி ஆன பின்பும் வரவில்லை.
“ ஏ.!!! அப்பா இவனுக்கு என்ன இவ்ளோ கோவம் வருது காலம்பூரா எப்புடி சமாளிக்க போரனு தெரியல என்று தன்னை நொந்து கொண்டு டிவி ரிமோட்டை அழுத்தி டீவீ பார்த்து கொண்டு இருந்தான் அகஸ்டீன் அன்று இரவு நடக்க போகும் விபரீதத்தை அறியாதவனாய்.
 இதே நேரம் எல்லாம் கணித்த படி சரியாக போய் கொண்டு இருக்கிறது இன்னும் ஒரே ஒரு முயற்சிதான் அதுவும் முடிந்தால் சரியாக வினய் நமக்குத்தான். என்று நினைத்துக்கொண்டே திருச்சியிலிருந்து வந்த உடன் வினய்க்கு கால் பண்ணினான் ஹரீஷ்
”ஹலோ சொல்லு ஹரி வீட்டுக்கு வந்த்ட்டியா?”
“ம்ம்  வந்துட்டன்டா நீ எங்கருக்க?”
“நான் காலேஜ் போய்ட்டு பஸ்ஸ்டான்ட்லருந்து ரூமுக்கு நடந்து போய்டிருக்காண்டா”
“ஏன்டா வண்டி என்னாச்சுடா?”
“சும்மாதான் அகஸோட சண்டை போட்டண்டா அதான் கொண்டு வரல”
“ஓகே. அப்பனா நீ அன்னா செலை கிட்ட வைட் பண்ணுடா நான் தொ வந்துகிட்டே இருக்கன்” சொன்ன படி இரண்டு நிமிடங்களுக்குள் ஹரீஷ் வந்தான்>
“என்ன மச்சான் இப்புடி இருக்க? சாப்டியா இல்லையா?”
:இல்லடா மனசு கஷ்ட்டமா இருக்குடா அவனோட பேசவும் முடியல, பேசாம இருக்கவும் முடியல. இப்ப கூட நானே பேசிடுவண்டா ஆனா என்னஅவன்  மூஞ்சிலையே முழிக்காதனு சொல்லிட்டான்டா அதாண்டா தாங்க முடில என்று விம்மினான்” சரி சரி வா சாப்பிடலாம் வேணாம்டா அவனும் ரெண்டு நாலா சாபிடுலடா.
ஹரீஷுக்கு எரிச்சல் பொத்து கொண்டு வந்தது இருந்தாலும் அடக்கி கொண்டு “ஹே அவனுக்கும் வாங்கிட்டு போய் நீயே குடு சமாதானம் ஆகுடா என்று அந்த பாருடன் கூடிய பெரிய ஹோட்டலுக்கு கூட்டி சென்றான்
குளிரூட்டப்பட்ட அறையில் இவர்கள் இரண்டு பேரை தவிர்த்து மேலும் சில கல்லூரி மாணவர்களும் சற்று தள்ளி இருந்த மேசையில் அமர்ந்து மதுவை ருசித்து கொண்டு இருந்தனர்.
“மச்சான் ஒரு சின்ன பெக் போடேண்டா மனசு லேசாயிடும்”
“ அதுலாம் வேணாம்டா  எங்கம்மா போனதுலருந்து எல்லாத்தையும் விட்டன்டா”
“ ஹே எனக்காகடா அதுமில்லாம சண்ட போட்டு சமாதானம் ஆகபோற நைட் ஜாலியா இருக்கும்டா ஒரே ஒரு ஆப் சொல்லுரண்டா”
இருக்குற வேதனையில் வினய்க்கும் அந்த போதை தேவை பட்டதால் சரி என்றான்
கண்ணாடி குவளையில் மதுவை ஊற்றி கொடுத்தான் ஹரீஷ்.  அகஸ் மீதுள்ள கோவத்தில் முழுதும் குடித்து முடித்து விட்டான்வினய். ஆனால் முதலில் ஊற்றிய மதுவையே உதட்டில் வைத்து வைத்து எடுத்து லாவகமாக சமாளித்து கொண்டிருந்தான் ஹரீஷ்
“ டேய் ஹரீசு நான் உன்னை என் பிரண்டா தாண்ட பாக்குறன் ஆனா இந்த அகஸ்சு பய தாண்டா என்ன புரிஞ்சிக்காம சந்தேக படுறான் நான் அவன் மேல எவ்ளோ லவ் வேசிருக்க்ர்னு அவனுக்கே தெரியாதுடா” .ஏன் எனக்கே தெரியாதுடா. போதை ஏறிவிட்டது என்றாலும் நிதானத்துடன் பேசினான் வினய்.
“ சரி விடுடா கண்ணுக்கு தெரியாத இடத்துல மச்சம் இருக்கவங்களுக்கே சந்தேக புத்தி அதிகமாதான் இருக்குமாம்டா” ஹரீஷ் தனது பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்க தொடங்கி இருந்தான்.
“என்னடா சொல்லுற அவனுக்கு எங்கடா இருக்கு மச்சம்?”
“அப்புடியே தெரியாத மாதிரி நடிக்காதடா, அகஸ்க்கு அவனோட லெப்ட் தொடையில பின் பக்கம் ஒரு ரூபா அகலத்துல ஒரு மச்சம் இருக்குமே நீ பாத்தது இல்லையா?”
அதுவரை ஏனோதானோ என்று இருந்த வினய்க்கு இந்த புள்ளி விவரம் சுர்ரென்று இருந்தது
:’’டே அவனுக்கு அங்க மச்சம் இருக்குனு உனக்கு எப்டிடா தெரியும் “ கடுப்பும் கோவமும் கலந்த வாறே பேசினான்  வினய்
திட்டம் கைகூடுவதை என்னி மகிழ்ந்த வாறே அதை காட்டி கொள்ளாமல் தவித்தான் ஹரீஷ்.
அதுவந்து அது சும்மா சொன்னான் மச்சான்  ஒரு யூகம்தான்”
“யாராட்டடா கத விடுற? நீ சொன்ன அதே இடத்துல அதே மச்சம் அவனுக்கு இருக்கு.” கண்டிப்பா இது யூகமா இருக்க முடியாது ஒழுங்கா சொல்ல போறியா? இல்ல ஓத வாங்க போறியா? சட்டை பிடித்து கேட்டான்”
“சரி சரி சொல்லிடுரண்டா விடுடா. மச்சான் தப்பா எடுத்துக்காதடா நானும் உன்னமாதிரி கே தாண்டா. பர்ஸ்ட் இயர் படிக்கும் போது நானும் அகஸும் தப்பு பன்னிருக்கோம்டா அப்ப பாத்ததுதாண்டா சொல்லுறன். சும்மா சொல்ல கூடாதுடா உனக்கு செம கம்பனிடா அவன் சும்மா வழதண்டு மாதிரி இருக்கும்டா அவன் உடம்பு.”
“” ச்ச்சே நிறுத்து நீயெல்லாம் ஒரு மனுசனாடா ஏன்டா இவ்ளோ நாலா எண்ட இத சொல்லுல?” என்று ஆத்திரம் பொங்க கேட்டவன் சற்றே நிறுத்தி பின் தொடர்ந்தான்
“இருடி உனக்கு அப்பறம் வெச்சுகிரன் மொதல்ல சார போய் பாத்துட்டு வறேன்” என்று கூறி விட்டு கோவமும் ஆத்திரமும் கொப்பளிக்க வீடு நோக்கி விரைந்தான். மணி பத்தை நெருங்கி கொண்டு இருந்தது.
“ ஏற்கனவே இருந்த கோவமும், ஹரீஷுடன் ஏற்கனவே அவன் உறவு வைத்திருந்ததை மறைத்து விட்டு தன்னையே அகஸ் சந்தேக படுவதையும் நினைத்து வினய்க்கு ஆத்திரம் கண்களை என்ன வாய், மூக்கு, காது எல்லாத்தையும் மறைத்தது. அதிலும் வாழைதண்டு போன்ற உடம்பு என்று அவன் கூறியதுதான் வினய்யின் காதுகளில் வந்து வந்து சென்றது. வேகமாக வீட்டை அடைந்தவன் படி ஏறும்போதே
“ அகஸ்டீன் .............டே அகஸ்டீன் என்று கத்திகொண்டே ஏறினான்
மூன்று நாட்களுக்கு பிறகு ஆசை காதலன் அன்போடு அழைக்கிறான் என்று வாசல் நோக்கி ஓடோடி வந்தான் அகஸ். இருவரும் நிலைப்படி அருகே சந்தித்து  கொண்டனர். நேரடியாக கேள்வி கனைகளை தொடுத்தான் வினய்.
“ ஹரீஷ் கே நு உனக்கு ஏற்கனவே தெரியுமா தெரியாதா”?
“ என்னது?”
“ என்ன முழிக்கிற தெரியுமா தெரியாதா?”
“ஆமா தெரியும்” இப்ப அதுக்கென்ன”
“பொளேர் என்று ஒரு அரை கன்னத்தை தழுவியது அகஸ்க்கு”
“ ஏன் என்ட சொல்லல?”
கன்னத்தை தடவி கொண்டே பேச துவங்கினான். “ சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுல சொல்லல” அப்டியே சொன்னாலும் நீ என்ன நம்பவா போற அதுக்கும் உன்ன சந்தேக படுறன்னு சண்ட போடுவ”
“ ஹே சும்மா சமாளிக்காதடா நான் சொல்லட்டா நீ ஏன் சொல்லலன்னு? ஏன்னா? அத என்ட சொன்னா உங்க ரெண்டு பேருக்குள்ள இருந்த உறவு எனக்கு தெரிஞ்சிடும்ல அதான்”
“என்ன உளர்ற “?
“எவன்டா உலருறது உங்க ரெண்டு பேருக்கும் ஏதும் இல்லாம எப்டிடா உன் தொடையில இருக்குற மச்சம் அவனுக்கு தெரியும்? இதற்கு பதில் சொல்ல தெரியாமல் ஒருகணம் திணறித்தான் போனான் அகஸ்.
“என்ன பதில் சொல்ல முடியலையா........?”
“தங்கம் இல்லடா அவன் எதோ சூழ்ச்சி பண்றாண்டா, ஏற்கனவே எனக்கு போன பண்ணி உன்ன விட்டு போகணும்னு மெரட்டினாண்டா திருச்சில நமக்குள்ள சண்ட வந்ததுக்கு கூட அவனும் காரணம்டா.
“சீ வாய மூடு. பொய் வேற சொல்லுறியா இல்லாத லீலஎல்லாம் நீ பண்ணிட்டு என்ன சந்தேக படுரியா நீ?, உன் புத்தியே எல்லாருக்கும் இறுக்கும்னு நெனச்சியா?
“ வார்த்தைகள் ஒவ்வொன்றும் இடி போல் இறங்கியது. இதனை கேட்ட அகஸ் புழுவாக துடித்து போனான்
“இல்ல வினு நான் எந்த தப்பும் பண்ணலடா உண்மையில அவனுக்கு எப்படி மச்சம் தெரிஞ்சிதுன்னு தெரிலடா, கெஞ்சினான்
“ உண்ட்ட்ட கேக்க வேண்டியது கேட்டுட்டன். உன்ன பாத்தாலே எனக்கு அருவருப்பா இருக்கு மொத்தல்ல எங்கியாது போய் தொல” ஈயத்தை காய்ச்சு துப்புவது போல இருந்தது வினய்யின் ஒவ்வொரு சொல்லும்’
“நான் எங்கடா போறது செத்துதான் போகணும்” மொதல்ல அத செய்யி நானாவது நிம்மதியா இருப்பன்”
சொல்லிவிட்டு பைக்கை கிளப்பி கொண்டு எங்கோ சென்று விட்டான். சென்றவன் ஹரீஷை தேடி பார்த்தான். இருந்த ஆத்திரத்துக்கு அவன் மூஞ்சில் நாலூ குத்து விட வேண்டும் போல இருந்தது வினய்க்கு. அவன் கிடைக்காதால் வீட்டிக்கு விரைந்தான், கதவிரண்டும் ஆவென திறந்து கிடந்தது அனைத்து விளக்குகளும் எரிந்தன. நடு கூடத்தில் அகஸ் எழுதிய கடிதமும் அதன் மீது அவனுடைய செல்போனும் வைக்க பட்டிருந்தது.
என் உயிருக்கு உயிரான வினு குட்டிக்கு
                  சத்தியமா நான் எந்த தப்பும் செய்யலடா. நீ செத்து தொலைனு சொல்லிட்ட. எதுக்கு சொன்னியோ தெரியல ஆனா நான் போறான்டா. அனேகமா நீ இந்த லெட்டர் படிக்கும் போது நான் போயிருப்பண்டா. ஐ லவ் யூடா. மிஸ் யூ டா.
                                உன்னோட அகஸ் குட்டி
படித்து முடித்த வினய்க்கு கை காலெல்லாம் உதர தொடங்கி விட்டது. அவன் கையிலிருந்த அகஸ்சின் போன் அதிர்ந்திருந்தது. ஹரீஷ் காலிங் என்று வந்தது. “இவன் ஏன் இவனுக்கு கால் பண்றான்.?” மனக்குழப்பத்துடன் அட்டன்ட் பண்ணி காதுக்கு கொடுத்தான்.
“என்னடா ஹீரோ...... நீ சொல்லுறதையே கேக்க மாடியாடா? நேத்து நடந்ததுக்கே இந்நேரம் நீ ஓடி போயிருக்கனும்.!!! ஆனா போகல. அந்த வினய் பயலும் எவ்ளோ சண்ட போட்டாலும் அப்புடியே உருகுறான்......? அதுக்குத்தான் இன்னைக்கு வேற வெடிய போட்டு அனுப்பிருக்கேன் என்ன புரியலையா? உனக்கும் எனக்கும் பர்ஸ்ட் இயர் படிக்கும் போதே எல்லாம் நடந்துட்டுன்னு அளந்து விட்டேன். அந்த முட்டா பயலும் நம்பிட்டான். எப்டின்னு கேக்குறியா? என் எஸ் எஸ் கேம்ப் ல ஒரு தடவ உன் மேல சாக்கடை தண்ணிய ஊத்துனேன் நாபகம் இருக்கா......? அப்ப கூட என் கண்ணு முன்னாடியே ட்ரெஸ்லாம் கழட்டிட்டு ஜட்டியோட நின்னு அலசுனியே...? அப்ப எதேச்சையா கண்ணுல பட்ட அந்த மச்சம் இப்ப கை குடுத்துட்டு தட்ஸ் ஆள்.
இங்கபார்.. இனி என்னதான் அவன்ட்ட நீ கெஞ்சினாலும் அவன் உன்ன நம்ப மாட்டான் மரியாதையா பெட்டி படுக்கைய கட்டிக்கிட்டு கெளம்பு. இல்லனா வினய்யே உன்ன அனுப்பிடுவான்” என்ன நான் சொல்றது?
“அனுப்பதாண்டா போறன் அவன இல்ல உன்னதான். நம்பிக்க துரோகி உன்ன போய் நம்புணன் பாரு என்ன செருப்பால அடிச்சா கூட தகாதுடா, உன்ன அப்புறம் பாத்துக்கிறன். இப்ப என் உயிர் என்ன விட்டு போய்ட்டு. அத தேடி கண்டு பிடிக்கணும்” னு சொல்லிட்டு வைத்தான் வினய்
 “அய்யோ அறிவு கெட்ட நாயே கொஞ்சம் பொறுமையா இருந்துருக்கலாமேடா. இப்ப உன்னோட கோவத்தால அவனயே இழந்துடுவ போலயேடா என்று தலையில் அடித்து கொண்டு அழுதவன் சற்றும் தாமதிக்காமல் பைக்கை எடுத்து கொண்டு கிளம்பினான்.
“ஊரையே கத்தி எழுப்பி கொண்டு படு வேகமாக 108 ஒன்று கடந்து சென்றது. அதை பார்த்ததும் வினய்க்கு உடலெல்லாம் படபடக்க தொடங்கியது. நேரம் இரவு பதினொன்றை தாண்டி விட்டிருந்தது நகரில் ஆங்காங்கு துரித உணவு கடைகள் மட்டும் மூடும் தருவாயில் இருந்தது. அது வரை சிறிய நகரமாக தெரிந்த மயிலை இன்றுதான் பெரிய நகரமாக தோன்றியது. எத்தனை தெருக்கள், எத்தனை சந்துகள் எல்லா வற்றிலும் புகுந்து பார்த்தான்., இரண்டு பேருந்து நிலையங்களிலும் பார்த்தான். அங்கு தள்ளுவண்டி பழக்கடைகாரரகள் வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தனர் அவர்களை விசாரித்தான் எங்கும் கிடைக்க வில்லை அகஸ்டீன்.
“ ஐயோ அகஸ்சு நான் தெரியாம பண்ணிட்டனடா போறதா இருந்தா என்னையும் கூட்டி போயிருக்கலாமேடா. நீ இல்லாம நான் என்னடா பண்ணுவன் எங்கடா போயிருக்க?” என்று தன்னை நொந்து அழுத போது ஒரு யோசனை தோன்றியது. “ ஒரு ஆம்புலன்ஸ் போனுதே , ஒரு வேளை ஏதாவது வண்டில அடிபட்டுருப்பானோ? உடனே நகரின் அனைத்து மருத்துவ மனைகளுக்கும் விரைந்தான். ஏமாற்றத்தோடு திருபியவன் இறுதியாக அரசு மருத்துவ மனை நோக்கி சென்றான் அங்கு அவன் எதிர்பார்த்த 108 நின்று கொண்டு இருந்தது. கை காலெல்லாம் உதறியது, பயத்தில் இதயம் துடிப்பது காதுக்கு கேட்டது. ஆம்புலன்சை நெருங்கி உள்ளே எட்டி பார்த்தான். உள்ளே சில வாழை இலைகளும், எரிந்து போன துணி துண்டுகளும், கருகி போன சதை பகுதிகளும்  கிடந்தது. ஒருவாறு மனதை தேற்றி கொண்டு அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் விசாரித்தான்
“ அண்ணே என்ன கேசுன்னே?
“ ஒரு பொண்ணு தீக்க்குளிசுட்டு தம்பி அதான்”
“எதோ ஆக்ஸிடென்ட்னு கேள்வி பட்டன்?” சும்மா போட்டு பார்த்தான்.
“ ஆமாம் தம்பி ரயில்ல யாரோ அடிபட்டாங்கலாம் ஸ்பாட்அவுட்டாம் ஆம்பலயாம் அதான் மேம்பாலத்துகிட்ட ட்ராபிக் ஆய்ட்டு.” சொல்லி விட்டு நகர்ந்து விட்டார் அவர். வெயிலில் தூக்கி எரிய பட்ட புழு போல துடித்தான் வினய், பைக்கை  எடுத்து கொண்டு ஜங்க்ஷன் நோக்கி விரைந்தான். கண்ணீர் காற்றில் கலந்தது, காற்றுக்கே ஆச்சர்யம் நம்மை விட வேகமாக செல்லுகிறான் என்று. ரயில் நிலையத்தின் பிரதான வாசல் வழியே உள்ளே நுழைந்தான் விபத்தை ஏற்படுத்திய அந்த ரயில் வராததால் அதற்காக காத்திருந்த அனைவரும் குழுமி இருந்தனர்.  விபத்து நிகழ்ந்தது நிலையத்தின் அருகில்தான் என்பதால் நிகழ்விடத்திற்கு மக்கள் சாரை சாரையாக சென்று வந்த வண்ணம் இருந்தனர். அவர்களில் ஒருவன் பேசும் குரல் வினய்க்கு கேட்டது.
 “ தலையே இல்லடா, பாவம்ப்பா அவருக்கு என்ன பிரச்சனையோ? ,” உடனே அவர்களை நிறுத்தி கேட்டான்
“அண்ணே அவரு என்ன டிரஸ் போட்டிருக்கருன்னே? ஆள் குண்டா ஒல்லியா?”
“வேட்டி கட்டி கருப்பு சட்ட போட்ருக்காரு தம்பி நல்ல வாட்ட சாட்டமா இருக்காரு என் தம்பி உனக்கு தெரிஞ்சவரா”?
“இல்லன்னே சும்மாதான் கேட்டான்” வினய்ய்க்கு போன உயிர் திரும்ப வந்தது போல இருந்தது. அப்பனா நீஎங்கடாபோன? ஒரு வேளை காரைக்காலுக்கு போயிருப்பானோ சரி உடனே போய் பாத்துடுவோம். என்று நினைத்து கொண்டு ரயில் நிலையத்திலிருந்து கிளம்பியதிலிருந்து அங்கு  எதிர் பட்ட கோயிலுக்கெல்லாம் அகஸ் கிடைத்ததும் அவனை கூட்டி கொண்டு வருவதாக வேண்டி கொண்டே கடை தெருவை அலசி கொண்டும் சென்றான்.
 “எனக்கு மனசு கஷ்ட்டமா இருந்தா இங்கதாண்டா வந்து அழுவேன் சக்தி வாய்ந்த சார்ச்டா” என்று அகஸ் ஒருமுறை வினய்யிடம் கூறிய புனித சவேரியார் ஆலயம் தென்பட்டது. எதோ ஒரு நம்பிக்கையில் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான். வினய்க்கு புத்துயிர் பிறந்தது போல இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக மின்சாரம் தடை பட்டதால் அந்த பகுதியே இருண்ட கண்டமாகி விட்டது. கதவு அறைந்து சாத்த பட்டிருந்தது. இருந்தாலும் அந்த கும்மிருட்டின் இடையில் ஒரு உருவ சலனம் தென் பட்டது. “கடவுளே அது கண்டிப்பா என் அகஸ்சா இருக்கணும் என்று அவனுக்கு தெரிந்த, தெரியாதா தெய்வங்களை எல்லாம் வேண்டி கொண்டு மொபைலை எடுத்து அங்கு சூழ்ந்திருந்த இருட்டுக்கு விடை கொடுத்தான்.
“ திடீர் வெளிச்சம் கொடுத்த கண் கூச்சத்தால் அழுது கொண்டு இருந்த அகஸ்டீன் நிமிர்ந்தான்.”
“டேய் அகஸ்சு.............!!!!!!!! செல்லம் தவிக்க விட்டுடியேடா என்ன நான்தாண்டா தப்பு பண்ணிட்டேன் அந்த ஹரீசு பயல பத்தி எல்லாம் தெரிஞ்சி கிட்டண்டா........” எனக்கு நீ தாண்டா முக்கியம்  என்று கட்டி பிடித்து கொண்டு அழுதான் வினய்.
ஓ........ வென்று கதறியழுதபடி வினய்யை கட்டி பிடித்த அகஸ், “எனக்கு தெரியும்டா நீ வருவன்னு, நம்ம காதல் நிஜமாருந்தா கண்டிப்பா நீ வருவன்னு காத்திருந்தண்டா, சாகுற முடிவோடதாண்டா வந்தன், செத்துட்டா உன்ன பாக்க முடியாதேடா . அதாண்டா முடிவ மாத்திகிட்டு இங்க வந்துட்டன்.” என்று கூறும்போது மின்சாரம் வந்ததால் அதுவரை அவர்களை சூழ்ந்திருந்த இருள் மறைந்து ஒளி வெள்ளம் பொங்கியது.
இனி ஆயிரம் ஹரீஷ் வந்தாலும் அவர்களை பிரிக்க முடியாது. சந்தேகம் என்ற தீ பொறி ஏற்படுத்திய பெருந்தீ இப்பொழுதான் அணைந்து, அவர்களை அணைக்க வைத்திருக்கிறது. இந்த இரவு நேரத்தில் இனி நாம் ஏன் அவர்களுக்கு இடையில் நந்தியாய்? வாருங்கள் உறங்க செல்லுவோம்.
                              -நிறைந்தது.